சென்னைத் தியாகராய நகர், டிசம்பர்
திங்கள் 19 ஆம் நாள், 1973 ஆம் ஆண்டு, நம்மில் பலர் பிறந்திருக்கவும், அந்த
ஒரு மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மிகுந்த நாளை சந்தித்திருக்கவும்
வாய்ப்புகள் இல்லை.
பலத்த
சலசலப்புக்கு இடையே அந்த மனிதரை, மனிதர் என்று சொல்வதை விட மனிதர்களுள்
மலர்ந்த ஒரு விடியலை ஒரு சக்கரப் படுக்கையில் வைத்து தூக்கி வருகிறார்கள்,
இரண்டு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று அந்த நாற்காலியின் பின்னால் கவலை
தோய்ந்த முகத்தோடு அவர் நிலையைப் பரிசோதிக்கிறார்கள், சிறுநீரைத் தனியே
பிரித்தெடுக்கும்
கருவி ஒரு பக்கம் பொருத்தப்பட்டு இருக்கிறது, குழாயின்
வழியே செல்லும் சிறுநீர்ப் பையை ஒருவர் பிடித்திருக்கிறார்.அந்தப்
படுக்கையின் அசைவுகள் கடும் வலியைத் தோற்றுவிக்கன்றன, ” அம்மா, அம்மா”
என்று முனகியவாறே வருகின்ற அந்த முதியவரின் முகத்தில் மட்டும் விடியலுக்கான
தேடல் மாறவே இல்லை. அது சில நூற்றாண்டு கால மாற்றத்தை வெறும் இருபது
வருடங்களில் நிகழ்த்திக் காட்டிய ஒரு வரலாற்றுத் தேடல்.
மேடையில்
அமர்த்தப் படுகிறார் அந்த வாழ்ந்த வரலாறு, உரை துவக்கிய போது ஆர்ப்பரித்த
கூட்டம் அமைதியாய் செவி மடுக்கிறது, அவரை எப்போதும் விமர்சிக்கின்ற
மாற்றுக் கருத்துக் கொண்ட தோழர்களும் அந்த மாபெரும் உரையைக் கேட்பதற்காக
பல்வேறு கோணங்களில் அமர்ந்திருக்கிறது. ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கும்
மேலாக நீடித்த அந்த உரையின் இடை இடையே ” அம்மா, அம்மா, வலிக்குதே, தாங்க
முடியலியே” என்று பெருங்குரல் எடுத்துக் கதறுகிறார், இருப்பினும் வலி
பொறுத்துத் தொடர்கிறார். நோயின் பெரும்பிடியில் (குடல் இறக்கம், சிறுநீரகக்
கோளாறு) மரணப் படுக்கையில் இருந்தவாறே தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம்
அவரது அந்த புரட்சி பயணம் தொடர்ந்து நடந்தது. அந்த இறுதி பேருரை நிகழ்ந்து
சரியாக ஐந்தாவது நாள் டிசம்பர் திங்கள் 24 ஆம் நாள் அவர் மறைந்து போகிறார்.
நண்பர்களே,
மனித குல வரலாற்றில், இவ்வளவு வலியையும் தாங்கிக் கொண்டு தன் மக்களின்
விடியலுக்காகப் போரிட்ட ஒரு மாபெரும் வீரனை, தலைவனை நான் படித்த வரை
இன்னும் அறியவில்லை, இனி அறியப் போவதும் இல்லை.
அவர் தான் நண்பர்களே பெரியார், அவர் ஒரு
சகாப்தம், அன்று அவர் தம்மில் தாங்கிய வலியின் கொடுமையில் தான் நமக்கான
விடியல் கிடைத்தது, நமக்கான கனவுகள் மெயப்ப்பட்டது.அவர் அன்று உருவாகிய
அறிவுப் பெருந்தீ கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. “UNESCO” என்ற
அனைத்துலக ” ஐக்கிய நாடுகள், கல்வி, அறிவியல், பண்பாடு அமைப்பு தந்தை
பெரியாரைப் பற்றி தன் குறிப்பில் இப்படிச் சொன்னது, ” பெரியார், புது
உலகின் தொலை நோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக
சீர்திருத்தத்தின் தந்தை, அறியாமை, மூட நம்பிக்கை, பொருளற்ற பழக்க
வழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி”,
நண்பர்களே
அவர் மட்டும் ஒரு அமெரிக்கராகவோ, ஐரோப்பியராகவோ பிறந்திருந்தால், அவர்
தான் இன்றைய உலகின் மிகப் பெரிய சிந்தனையாளராக ஊடகங்களில்
பரப்பப்பட்டிருப்பார், ஆனால், யாருடைய விடுதலைக்காக அவர் கடுமையாக
உழைத்தாரோ, அவர்களாலேயே இன்றளவும் விமர்சிக்கப்படும் ஒரு தலைவராக அவர்
குறுக்கப்படக்கூடாது.
விடுதலைச் சிறுத்தைகளின் தோழர்
ரவிக்குமார் (சட்ட மன்ற உறுப்பினர்), அவர்களால் பெரியார் விமர்சனம் செய்யப்
பட்டபோது, பன்னாட்டு இதழ்களில் எழுதும் வாய்ப்புப் பெற்ற நண்பர்
ஏ.பன்னீர்செல்வம் அவர்களிடம் பத்திரிக்கை நண்பர்கள் கேட்டார்கள்,பெரியார் மீது பெரும்
மதிப்பு வைத்திருக்கும் நீங்கள் ஏன், அதனை எதிர்த்து எழுதியிருக்கக்
கூடாது” என்று?
அதற்கு
அவர் சொன்னார், இவர்கள் எழுதும் கருத்துக்கள் ஒரு எல்லையை விட்டுச்
செல்வதில்லை, ஆனால் இவற்றை மறுத்து எழதும் போது, அந்த மாபெரும் மனிதரைப்
பற்றிய உண்மைகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு, ஒரு விமர்சன நோக்கோடு மற்றவர்
பார்க்கின்ற நிலை வரக் கூடாது, அதனால் தான் எழுதவில்லை” என்கிறார்.
இந்திய
விடுதலையில் பெரும் பங்காற்றி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராய் இருந்து,
மதுவிலக்குக் கொள்கையை காந்தியாருக்கு எடுத்துரைத்து, சமூக நீதிக்கான போர்
மறவராய் இருந்து, சுய மரியாதை இயக்கம் கட்டமைத்து, சீர்திருத்தத் திருமணம்
என்ற ஒரு புதிய வாழ்க்கை ஒப்பந்த முறையை சட்டமாக்கி, இன்னும் சொல்லிக்
கொண்டே போகக் கூடிய அரும் பணிகளை ஆற்றிய அண்ணல் தான் தந்தை பெரியார்.
இன்று நாம் வாழுகின்ற ஒரு விடுதலை
பெற்ற, சுய பொருளாதார, கல்வி மற்றும் சமூக வாழியல் வாய்ப்புக்களை நமக்கு
எல்லாம் வாரி வாரி வழங்கி விட்டு, இன்னமும் விமர்சனங்களை எதிர் கொள்ளும்
ஒரு தலைவராகவே மாறிப் போன தந்தை பெரியாரை நாம் வெறும் தலைவராக மட்டுமே
பார்க்க இயலாது.
திராவிடம்
என்கிற பல நூற்றாண்டு கால வெற்றி வரலாற்றின் வெற்றி நாயகன் அவர், அவர் ஒரு
வாழ்த்த வரலாறு, இன்னும் வாழுகின்ற வெற்றி, அவர் தான் தமிழினம் தலை
நிமிர்ந்து வாழ வகை செய்த பகுத்தறிவுப் பகலவன்.
நண்பர்களே,
“தந்தை பெரியார்”, இந்தப் பெயரை அவரது வரலாற்றை முழுவதும் ஒரு முறை
படித்து விட்டு சொல்லிப் பாருங்கள்………………
என்னை விடவும்
அழுத்தமாகச் சொல்வீர்கள்,
அது
ஒரு எழுச்சி பெற்ற இனத்தின் வழிபாட்டுக்குரிய பெயரென்று….
அவர்
தாம் பெரியார், அருந்தவச் செல்வர், அழியாத வரலாற்றின் அறிஞர்”